Thursday, December 9, 2010

பாடல் 455: மன்னுயிரை மீட்கப் புவி

    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி

    சரணங்கள்

1. மன்னுயிரை மீட்கப் புவி தன்னிலெழ  உன்னியநல்
    புண்ணிய பரன் செயலை என்னென்று புகழ்ந்திடுவேன்  

2. வானாதி வானங்கொள்ளா மகிமைப் பராபரனார்
    மாது மரிவயிற்றினில் மனுவுருவானதென்ன?

3. சராசரம் படைத்த சர்வ வல்ல தேவனுக்கு
    தங்குதற்கு இடமில்லையோ? தாபரிக்க வீடில்லையோ?

4. சேனைத் தூதர்கள் கூட சிறப்புடன் கவிபாட
    கானகக் கோனார் தேட கர்த்தரானாரோ நீட?

5. தூய படைகள் கோடி சூழ்ந்திலங்கும் பரனே
    பாயும் மாடுகளாமோ பக்கத்துணையாவது?  

6 . கர்த்தத்துவங்கள் தாங்கும் காருண்ய பாக்கியமே 
     சுற்றி வைக்கப் பழந்துணியோ! தூங்கிடவும் புல்லணையோ?  

7. பண்டு தீர்க்கர்கள் முந்து பகர்ந்தபடியே வந்து
    சொந்தஜனம் இஸ்ரவேலின் சூரியனானீரோ?    

8. சீனாய்மலை தனிலே ஜொலித்த மகிமை எங்கே?
    தானே மாமிசத்துள்ளே தங்கிட மறைந்தீரோ?  

9. ஏதேன் வனக் காவினில் எட்டிப் பறித்த பழத்
    தீதுவினைகள் தீர ஸ்திரீயின் வித்தானீரோ?

10. பாவியான என்மேலே பட்சம் வைத்தாதரித்து
      ஜீவனைக்கொடுக்க இந்தச் சேணுலகம் பிறந்தீரோ
                                                                            A.V. ஆபேல்

No comments:

Post a Comment