Friday, December 30, 2011

பாடல் 10: செல்லுவோம் வாரீர்!


    இராகம்: முகாரி தாளம்: ஆதி

    பல்லவி

    செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்

1. சொல்லரிய நாதன் - சுய சோரி சிந்தி
    அல்லற்படுகின்ற - ஆகுலத்தைப் பார்க்க - செல்லுவோம்

2. ஒண்முடி மன்னனார் - முண்முடி தரித்து
    கண்மயங்கித் தொங்கும் - காட்சியைப் பார்க்க - செல்லுவோம்

3. மூங்கில் தடியாலே - ஓங்கியே அடிக்க
    ஏங்கியே தவித்த - இயேசையனைப் பார்க்க - செல்லுவோம்

4. சத்துருவின் கையில் உற்ற ஆட்டை மீட்க
    மெத்தப் பாடுபட்ட - நல்மேய்ப்பனைக் காண - செல்லுவோம்

5. கிருபாசனத்தில் - குருதியோடு சென்ற
    அருமைப் பிரதான - ஆசாரியனைப் பார்க்க - செல்லுவோம்

6. பாவ வினைபோக - தேவ தயவாக 
    ஜீவ பலியான இயேசையனைப் பார்க்க - செல்லுவோம்

7. நித்திய சாவின் கூரை - பக்தி தேகத்தேற்று
    வெற்றிபெற்ற இயேசு - மேசியாவைப் பார்க்க - செல்லுவோம்

8. கடனாளிகட்குப் - பிணையாளியாக
    உடலுயி ரீந்த - உன்னதனைப் பார்க்க - செல்லுவோம்

9. பிடித்து உதைத்து - இடித்து வதைத்து
    அடிக்கப்படும் நல் - ஆட்டுக்குட்டியைப் பார்க்க - செல்லுவோம்
                                                                                                AV. ஆபேல்

No comments:

Post a Comment