Monday, December 26, 2011

பாடல் 79: நித்தியானந்தத்தை நாடு


    இராகம்: தோடி தாளம்: ஆதி

    பல்லவி

    நித்தியானந்தத்தை நாடு - பர
    நிர்மல சுகந்தேடு மனமே

    அனுபல்லவி

    சத்திய மார்க்கந்தனிலே கூடு
    சற்சன சங்கத்தினோடுறவாடு

1. இந்திர ஜாலம் உலக வைபோகம்
    இன்றைக்கிருப்பதுவோ - சந்தேகம்
    அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம்
    ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் - நித்தியானந்தத்தை

2. தன தானிய முதலான சம்பத்து
    சாஸ்வதமோ? அதற்காயிரந் தத்து
    தினமும் கவலைகள் விளைத்திடும் வித்து
    சீச்சீ அதனை விரும்பல் விபத்து - நித்தியானந்தத்தை

3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம்
    மிருகாதிகள் சூழ் மாமிசப் பிண்டம்
    மெய்யே இதற்கிங்கு நித்திய கண்டம்
    புண்ணியன் பாதமுனக் காயிரம் தண்டம் - நித்தியானந்தத்தை

4. காண்பதெல்லாம் நிலை அல்ல அநித்யம்
    காய மிறந்திட வேண்டு மகத்தியம்
    வீண் பொருள் மீதுனக் கென்ன பைத்தியம்?
    வேதாகமமே சொல்வது சத்தியம் - நித்தியானந்தத்தை

No comments:

Post a Comment